மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் 11ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.
பிடிஆர் பழனிவேல் ராஜனின் மறைவைத் தொடர்ந்து நடக்கும் இந்த இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக எனமும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் கெளஸ் பாட்சா, அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, தேமுதிக சார்பில்பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர 16 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.இதையடுத்து கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வந்தது. முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட தலைவர்கள்மதுரையில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், பொதுக் கூட்டங்களிலும் பேசினர்.
இந் நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. அதன் பின்னர் பிரசாரம் செய்யக் கூடாது. வீடு வீடாகசென்று அமைதியான முறையில் வாக்குகள் சேகரிக்கலாம். நாளையும் வீடு வீடாக வாக்குகள் சேகரிக்கஅனுமதிக்கப்படும். நாளை மறுதினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கிறது.
இதையடுத்து தேர்தலுக்கான பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படைகளும் மதுரைக்குவரவழைக்கப்பட்டுள்ளன.
மத்திய தொகுதிக்குட்பட்ட மதுரை மாநகராட்சியின் 15 வார்டுகளிலும் இன்று மாலை 5 மணி முதல் 11ம் தேதிமாலை 5 மணி வரை உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது பெருமளவில் வன்முறைகளும், தாக்குதல்களும் நடந்ததால், வாக்குப் பதிவின்போதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே பாதுகாப்புக்காக கூடுதலாகதுணை ராணுவப் படைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் 3 கம்பெனி போலீஸாரும், மத்திய ரிசர்வ் போலீஸாரின் 4கம்பெனியினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழக போலீஸார் மட்டும் மொத்தம் 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நேற்றுபோலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் மதுரை மத்திய தொகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மதுரை மத்திய தொகுதிக்கு சம்பந்தப்படாத அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் இன்று மாலை 5மணிக்குப் பிறகு இருக்கக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications