2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல்: 65 % பதிவு
சென்னை:
தமிழகத்தில் இன்று நடந்த 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்களுடன் நடந்து முடிந்தது. 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 67,000 பதவியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.132 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 1913 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 525 மூன்றாம் நிலை நகராட்சி உறுப்பினர்கள், 4376 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 316 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3160 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 6061 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 46, 719 ஊராட்சி மன்ற கத வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 63,000 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.
மதுரை மற்றும் திருச்சி மாநகராட்சிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடந்தது. சென்னை மாநகராட்சி தேர்தலில் பெரும் வன்முறை மூண்டதால், இன்றைய தேர்தலில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் பொதுவாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது. நகர்ப்புறப் பகுதிகளை விட ஊராட்சிப் பகுதிகளில்தான் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
சென்னை புறநகர் நகராட்சிகள், மதுரை மற்றும் திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட வாக்குப் பதிவைப் போல வாக்குச் சீட்டுக்கள் பறிப்பு, கள்ள ஓட்டு, வாக்குப் பெட்டிகள் பறிப்பு உள்ளிட்டவை நடந்தன.
மற்றபடி பெரிய அளவிலான வன்முறை ஏதும் நடைபெறவில்லை. தேர்தல் நடந்த அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.
வாக்குப் பதிவு முடிந்ததும் 866 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை 18ம் தேதி காலை தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications