வட கொரியா மீது பொருளாதார தடை!
நியூயார்க்:
அணு குண்டு பரிசோதனையை மேற்கொண்டதற்காக வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடையை அறிவித்துள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகலை மீறி வட கொரியாக சமீபத்தில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திப் பார்த்தது.
இது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வட கொரியாவின் சோதனைக்கு இந்த நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.வட கொரியா மீது ஜப்பான் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இந்த நிலையில், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடையை ஐ.நா. விதிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியது. இதுதொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தது.இந்தத் தீர்மானத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. தீர்மானத்தில் உள்ள பல ஷரத்துகளை நீக்க வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என்று அவை கோரின. இதைத் தொடர்ந்து தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து திருத்தப்பட்ட தீர்மானம் பாதுகாப்புக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து வட கொரியா மீதான ஐ.நா. பொருளாதாரத் தடை அமலுக்கு வந்தது. இதன்படி, வட கொரியாவுக்கு உலகின் எந்த நாடும் வர்த்தக, சரக்கு பரிமாற்றத்தை மேற்கொள்ள மாட்டாது. வட கொரியாவில் உள்ள பேரழிவு ஆயுதங்களை கண்காணிக்கும் அதிகாரம் ஐ.நா.வுக்கு வழங்கப்படுகிறது.
வட கொரியாவுக்குப் போகும், அங்கிருந்து வரும் கப்பல்களை பரிசோதித்துப் பார்க்கும் அதிகம் ஐ.நாவுக்கு வழங்கப்படும். வட கொரியாவுக்கு உலகின் எந்த நாடும் தொழில்நுட்ப உதவிகளை செய்யக் கூடாது என பல அம்சங்கள் இந்த தடையில் இடம்பெற்றுள்ளன.
இந்த தடையை வட கொரியா ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது. ஐ.நாவுக்கான வட கொரியாவின் தூதர் பாக் கில் யோன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசுகையில், அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை வட கொரியா நிராகரிக்கிறது.
இதற்கு மேலும் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் அதிகரித்தால் அது போருக்கு அறை கூவல் விடுப்பதற்குச் சமமாகும். இதை விட கடுமையான நடவடிக்கைகளில் வட கொரியா இறங்க நேரிடும்.
பாதுகாப்பு கவுன்சில் இரட்டை நிலையை மேற்கொண்டுள்ளது. பாரபட்சமாக நடந்து கொள்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் பாதுகாப்பு கவுன்சில் முடங்கிப் போய்க் கிடக்கிறது என்றார் அவர்.
புஷ் வரவேற்பு:
அதேசமயம், ஐ.நா.வின் தடையை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வட கொரியாவின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தடை அமைந்துள்ளது.
இந்த நடவடிக்கை துரிதமாகவும், கடுமையாகவும் எடுக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. கொரிய தீபகற்பம் அணு ஆயுதம் இல்லாத பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.
மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த மாட்டோம் என வட கொரியா அறிவித்தால், உறுதியளித்தால், பொருளாதார தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க முடியும்.
பொருளாதார ரீதியிலான உதவிகளை வட கொரியாவுக்கு வழங்கவும் அமெரிக்கா முன்வரும். பிற நாடுகளையும் அதுபோல செய்ய கேட்டுக் கொள்ளும். ஆனால் வட கொரியா உறுதியளிக்க வேண்டும்.
சீனா, ஜப்பான், ரஷ்யா, தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்புடன் மீண்டும் பேச்சு நடத்த வட கொரியா முன்வர வேண்டும் என்றார் புஷ்.












Click it and Unblock the Notifications