ஏசுவாரே எதிர் நில்லாமல் போனதெங்கே?
சென்னை:தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவை அடிப்படையாக வைத்து முதல்வர் கருணாநிதிகவிதை ஒன்றை வடித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை திமுக கூட்டணிபெற்றுள்ளது. இதையொட்டி கவிதை ஒன்றை வடித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
கலைஞர் படைத்த கவிதை இதோ:
எங்குற்றார் எமது நண்பர்
பொங்குற்றுப் புயல் போல வீசுவாரே
பொல்லாத வார்த்தைகளால் ஏசுவாரே - எதிர்
நில்லாமல் போனதெங்கே; இப்போது
வெற்றி பெற்ற வீராப்பில்,
வெகுண்டெழுந்து கேட்க மாட்டேன்.
அண்ணா கற்றுத் தந்த அரசியல் பண்பாடு;
அனுப் பொழுதும் மறக்க மாட்டேன் -
ஆனால் அவர்கள் மட்டும் இனியேனும்
அட்டியின்றி ஒன்றைக் கற்க வேண்டும் -
அறுபதாண்டுக்கு மேல் பொது வாழ்வு கண்டவனாயிற்றே
அகவையும் எண்பதைக் கடந்தவனாயிற்றே -
ஏனோதானோவென்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும்
எதற்காகப் பேசி எழுதி அவன் இதயத்தை குடைய வேண்டும்;
என்றொரு கணம் எண்ணிப் பார்த்திடின், பகை
வென்றிடக் களம் வந்த பார்த்திபன் -
வேண்டாம் போர் என்று வில் அம்பைக் கீழே
போட்டது போல் இல்லாமல்-பின்னர் அவன்
துரோணராம் குருவினை வணங்கி விட்டுத்
தொடங்கினானே யுத்தத்தை; அந்த மரியாதைப் பண்பாடு
அரசியல் போரிலும் இரு தரப்பிடை இருக்குமானால்;
அமர்க்களத்தில் வெற்றியோ, தோல்வியோ;
அவரவர்க்குரிய புகழ்ப்பூ குடையாய் விரிந்து
அகலாத மணம் வீசிக் கொண்டேயிருக்கும், வரலாற்றில்!
தனக்கு வேண்டும் தக்க மரியாதை எனத்
தலைவன் விரும்புகின்றான் என எண்ணாதீர்; உடன் பிறப்புக்காள்!
தமிழகம் பரம்பரையாய்க் காத்திட்ட பண்பாடும் மரபும்
தவறாது பாதுகாக்கப்பட வேண்டுமே பட்டுப் போகாமல்
என்பதற்கே இந்தப் பாடல்!












Click it and Unblock the Notifications