லாரி லாரியாய் மண்ணைக் கவ்விய மதிமுக!
சென்னை:திமுக கூட்டணியிலிருந்து எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதமாக விலகி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துசட்டசபைத் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்த மதிமுக,உள்ளாட்சித் தேர்தலில் போண்டியாகிப் போகியுள்ளது.
எந்த ஜெயலலிதாவால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடம் சிறையில்அடைக்கப்பட்டாரோ அதே ஜெயலலிதாவுடன் வைகோ கூட்டணி வைத்தபோது வாக்காளர்கள் மனதில் பெரும்வியப்புதான் ஏற்பட்டது.
இந்த வியப்பு தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. மதிமுக சேர்ந்ததால் அதிமுகவுக்கு பெரிய லாபம்கிடைக்கவில்லை. ஆனால் அதிமுகவின் பலத்தால் மதிமுகவுக்கு சில எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.
மாறாக, திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணிவைத்து தேர்தலை சந்தித்தது மதிமுக. விடுதலை சிறுத்தைகள் வெளியேறிவிட்டதால் வைகோவுக்கு கணிசமானஇடங்களையும் ஒதுக்கினார் ஜெயலலிதா.
ஆனால் மதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு அக்கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.மாநகராட்சி வார்டுகளைப் பொறுத்தவரை 5 மாநகராட்சிகளிலும் சேர்த்து வெறும் 6 இடங்களில் மட்டுமேமதிமுக வென்றுள்ளது.
வைகோவின் கோட்டை எனக் கருதப்படும் நெல்லை மாநிகராட்சியில் ஒரு இடம் கூட கிடைக்காமல் வெள்ளைஅடிக்கப்பட்டுள்ளது. அதேபோல சேலத்திலும் இக்கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. மதுரையில் ஒருவார்டும், கோவையில் ஒரு வார்டும் கிடைத்துள்ளன. திருச்சியில் மட்டும் 4 வார்டுகள் கிடைத்துள்ளன.
நகராட்சிகளைப் பொறுத்தவரை 104 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதுவும் பெரும் அடியாககருதப்படுகிறது. பேரூராட்சி வார்டுகளில் 144ஐயும், ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 57ஐயும் வென்றுள்ளதுமதிமுக. மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியைப் போலவே மதிமுகவின் வாக்கு வங்கியையும் மிகக் கடுமையாகபாதித்துள்ளது விஜயகாந்த்தின் தேமுதிக.
தேமுதிக வெற்றி பெற்றுள்ள விதத்தைப் பார்த்தாலே இது தெரியும். இதுவரை மதிமுக பலம் வாய்ந்ததாக இருந்தஇடங்களில் எல்லாம் தேமுதிகவினர் பெத்த ஓட்டையைப் போட்டு வாக்கு வங்கியை உடைத்து தகர்த்துள்ளனர்.மதிமுகவை விட தேமுதிக அதிக இடங்களில் வென்றுள்ளதும் இதை தெளிவாகக் காட்டுகிறது.
நெல்லை மட்டுமின்றி கோவை மாவட்டத்திலும் தனக்கு சாதகமான பல இடங்களை திமுகவிடம் இழந்துள்ளதுமதிமுக. சேலத்திலும் இதே நிலைதான்.
மதிமுகவுக்குக் கிடைத்துள்ள இந்த பெருத்த தோல்வி அக்கட்சியினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை மறு சீரமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே அக்கட்சியினர்மத்தியில் பேச்சு நிலவுகிறது.
என்ன செய்யப் போகிறாரோ வைகோ?