ஒரிசா டிஐஜி கொலையில் திடீர் திருப்பம்!
புவனேஸ்வர்:ஒரிசா மாநில டிஐஜி ஜஸ்விந்தர் சிங்கை சுட்டுக் கொன்றது நக்சலைட்டுகள் அல்ல, அவரது பாதுகாவலர்கள்தான்என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 2 பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். நக்சலைட்டுகள்தொல்லை அதிகம் உள்ள தென் மேற்கு காவல் சரக டிஐஜியாக இருந்தவர் ஜஸ்விந்தர் சிங்.
சனிக்கிழமை இரவு 2 முக்கிய நக்சலைட்டுகளை போலீஸார் கைது செய்திருந்தனர். இதுகுறித்துசெய்தியாளர்களிடம் விளக்குவதற்காக ஜஸ்வந்தர் சிங் நேற்று ராயகடா மாவட்டம் சுனபேடா என்றஇடத்திலிருந்து பதம்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
பாதகுடிங்கா என்ற இடத்தில் அவரது கார் சென்றபோது சிலர் காரை மறித்து, தங்களது ஊரில் உள்ள காளிகோவிலுக்கு காணிக்கை தருமாறு டிஐஜியை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பணம் தர மறுத்துள்ளார்ஜஸ்விந்தர் சிங்.
காரிலிருந்து கீழே இறங்கி கூட்டத்தினரை கலைத்து விட்டு அவர் காரில் ஏறியபோது, திடீரென அவரை சிலர்சரமாரியாக சுட்டுத் தள்ளினர். இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஜஸ்விந்தர் சிங்கை சககாவலர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள்தெரிவித்தனர்.
நக்சலைட்டுகள்தான் டிஐஜியை சுட்டுக் கொன்று விட்டதாக முதலில் தகவல்கள் கிளம்பின. இந்த சம்பவத்தைத்தொடர்ந்து தென் மாவட்டங்கள் முழுவதும் உஷார் படுத்தப்பட்டன. நக்சலைட்டுகள் தாக்கி டிஐஜி ஒருவர்கொல்லப்பட்டதால் ஒரிசாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரிக்க டிஜிபி அமரானந்தா பட்நாயக் தலைமையிலான குழு சம்பவஇடத்திற்கு விரைந்தது. அங்கு சென்று விசாரித்தபோது தான், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றும்டிஐஜியின் பாதுகாவலர்கள் இருவர் தான் ஜஸ்விந்தர் சிங்கை சுட்டுக் கொன்று விட்டு இப்படி நாடகமாடியுள்ளனர்என்றும் தெரிய வந்தது.
இதனால் ஜஸ்விந்தர் சிங் விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. ஜஸ்விந்தரை சுட்டுக் கொன்றதாககூறப்படும் 2 பாதுகாவலர்களையும் போலீஸார் கைது செய்து விட்டதாக தெரிகிறது.
எதற்காக டிஐஜியை அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.