பிராமணர்களை வெறுக்கவில்லை: கருணாநிதி
சென்னை:திமுகவின் எதிரி பிராமணர்கள் அல்லர், பிராமணீய கொள்கைகள்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை விவரம்:
கேள்வி: நீங்கள் பிராமணர் விரோதி என்றும் அவர்களது தமிழ்த் தொண்டைக் கூட மதிப்பவரில்லை என்றும், இதனால் உங்கள் ஆட்சியை அகற்றுவதையே லட்சியமாகக் கொண்டு ஒரு சிலர் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியும?
கருணாநிதி பதில்: இவற்றையெல்லாம் உலகப் புகழ் பெற்ற உளவுத்துறையை அமைத்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை- அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல அவர்களின் நெஞ்சத்தில் நிறைந்துள்ள வஞ்சகத்தை அவர்கள் நடத்தும் ஏடுகளைப் படித்தாலே புரிந்து கொள்ள முடிகிறதே.
ஒன்றை, அவர்களும் சரி, அவர்களால் ஏமாற்றப்பட இருக்கிற அல்லது ஏமாற்றப்படுகிறவர்களும் சரி, தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நானோ என் தலைமையிலான கழகமோ தமிழர்க்கு தமிழ் மக்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற எந்த தனிப்பட்ட பார்ப்பனரையும் வெறுத்ததுமில்லை, வெறுப்பதுமில்லை.
தமிழ் செம்மொழி என நூறு ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞராம் சூரியநாராயண சாஸ்திரியாரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றத் திட்டம் வகுத்திருப்பதும், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட முயற்சி மேற்கொண்டிருப்பதும் அவரது நூல்களை நாட்டுடமையாக்கி அறிவித்ததும் இந்த அரசுதான்.
அக்ரஹாரத்து அதிசய மனிதர் என அண்ணா புகழ்ந்த வ.ராவின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்து சிறப்பித்ததும் இந்த அரசுதான்.
கல்கியின் நூல்களை அரசுடமையாக்கி ரூ. 20 லட்சம் அரசு நிதி வழங்கியதும் திமுக ஆட்சியில்தான். கிண்டியில் அமைந்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் அன்றொரு நாள் புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் கொடி மரத்தில் ஏறி தேசிய கொடியைப் பறக்க விட்ட ஆர்யா என்ற பிராமண இளைஞனின் சிலையை அமைத்திருப்பதும் எனது தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில்தான்.
பத்திரிக்கையாளர் சாவிக்கு பெரும் நிதியுதவி அளித்து பெருமைப்படுத்தியதும் திமுக அரசுதான். புரட்சிக் கவி பாரதிக்கு சிலை அமைத்ததும் திமுக அரசுதான்.
திமுக ஏற்க மறுப்பது பிராமணீயம் என்ற கொள்கையைத்தான், பிராமணர்களை அல்ல. திராவிட இயக்கம் என்னும் வீரிய வித்தில் விளைந்தவர்கள் என்பது உண்மையானால் பெரியாரின் கருத்துக்களிலும், அண்ணாவின் எழுத்துக்களிலும் இழையோடுகிற உண்மைகளை உணர்ந்து, எழுச்சி நடை, லட்சிய நடை போடுகிறவர்களாகவே இருப்பார்கள்.
கயவர்களின் சூழ்ச்சிக்கு காலம் காலமாக ஆட்பட்டு, சரித்திரத்தில் களங்கச் சேற்றைப் பூசிக் கொண்டுள்ள தமிழினம், இனியாவது அவர்களது ஏமாற்றுப் பேச்சில், புதைந்து விடாமல் விழிப்புற்று எழுக என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications