சிறுவன் மீது வெந்நீர் ஊற்றி சித்திரவதை: 3 பேர் கைது
சென்னை:சென்னை அருகே 11 வயது சிறுவனை வீட்டு வேலை செய்யச் சொல்லி சித்திரவதை செய்த ஆதரவற்றோர் இல்லநிர்வாகி, அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்தை ராமநாதன் என்பவர் நடத்தி வருகிறார்.இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களது மகன் கார்த்திகேயன்.
இங்கு 19 பேர் சிறார்கள் தங்கியுள்ளனர். இவர்களை தங்களது வீட்டு வேலைக்கு கார்த்திகேயன் குடும்பத்தினர்பயன்படுத்தி வந்துள்ளனர். சரியாக வேலை செய்யாவிட்டால் அடித்து, உதைத்தும், சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த காப்பகத்தில் தங்கி 6வது படித்து வந்த பாண்டியன் (11) என்ற சிறுவனை கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர். உடல் நலம் சரியில்லாததால் பாண்டியன் அந்த வேலையை செய்யவில்லைஎன்று தெரிகிறது.
இதையடுத்து கோபமடைந்த ராமநாதன், அவரது மனைவி, மகன் ஆகியோர் சுடு தண்ணீரை எடுத்து பாண்டியன்மீது ஊற்றியுள்ளனர். இதில் பாண்டியனின் உடல் வெந்து போனது.
இதையடுத்து காப்பகத்தில் இருந்தவர்கள் பாண்டியனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துசேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டியனிடம்வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து ராமநாதன், சீதாலட்சுமி, கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.