இட ஒதுக்கீடு-அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டவழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா சமீபத்தில்நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டத்திற்கு இடையே நிறைவேறியது.
இந் நிலையில் இச்சட்டத்தை எதிர்த்து சமத்துவத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பு மற்றும் சென்னை ஐஐடியின் முன்னாள் இயக்குநர்இந்திரேசன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சமத்துவத்திற்கான இளைஞர்கள் அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவில், பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் அறிவிப்பு சட்டவிரோதமானது, எனவே அதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்என்று கோரப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏன் மத்திய அரசின்உத்தரவுக்கு தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நோட்டீஸ் மூலம் நீதித்துறைக்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையே புதிய மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.காரணம், 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ படிப்பில் 22.5% ஒதுக்கீட்டுக்கு அனுமதி:
இதற்கிடையே, 2007-08ம் ஆண்டில், மருத்துவ உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கு 22.5 சதவீத இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க மத்திய சுகாதாரத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்து உயர் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில்கடைப்பிடிக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு குறித்து கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம்கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, டி.கே.ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், 2007-08ம் ஆண்டுக்கான மருத்துவ உயர்படிப்புக்கான மாணவர் சேர்க்கையின்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் (மொத்தம் 50 சதவீதம்), 22.5 சதவீத இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதில், 15 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 7.5 சதவீதம் பழங்குடியினருக்குமானது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மாநில அரசுகளுக்குஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள் 2007-08 கல்வியாண்டில் இருந்தே இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என உத்தரவிட்டனர்.
மேலும், அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் பொதுவான நுழைவுத் தேர்வை பிப்ரவரி 14ம் தேதி நடத்த வேண்டும். கவுன்சிலிங் மார்ச் முதல்வாரத்திற்குள் நடைபெற வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications