குப்பையில் வெடித்த பைப் குண்டு: 3 பேர் காயம்
திட்டக்குடி:கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குப்பையை தீ வைத்து எரித்தபோது, அதில் கிடந்த பைப் வெடிகுண்டுகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச்சிதறின. இதில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும் 11 பேர் மயக்கமடைந்தனர்.
திட்டக்குடியை அடுத்துள்ளது ஆலம்பாடி கிராமம். இங்குள்ள ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. நேற்றுகாலை 60 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காசி என்கிற தொழிலாளி, கிருஷ்ணசாமி என்பவரின் வீட்டுக்கு அருகே சாலையோரம் கிடந்த குப்பைகளை ஒன்றாகப் போட்டுக்கொண்டிருந்தார். குப்பை அதிகம் இருந்ததால், அதை அப்படியே தீவைத்துக் கொளுத்தினார்.
அந்தக் குப்பைக்குள் 2 பைப் வெடிகுண்டுகள் கிடந்துள்ளது. அது காசிக்குத் தெரியவில்லை. அவர் குப்பைக்குத் தீவைத்தபோது, பைப் குண்டுகள்பலத்த சப்தத்துடன் வெடித்தன.
இதில் காசியின் வலது காது பிய்ந்து போனது. அவருக்கு அருகில் நின்று கொண்டு வேலை பார்த்த சித்ரா (20), சங்கீதா (18) ஆகியோரும்காயமடைந்தனர். 3 பேரும் உடனடியாக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குண்டு வெடித்ததால் எழுந்த புகையை நுகர்ந்த 11 பேர் மயக்கமடைந்தனர். கண் எரிச்சலால் துடித்தனர். அவர்களும் மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றனர்.
குப்பைக்குள் குண்டு வந்தது எப்படி என்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் மேலும் குண்டுகள் இருக்கலாம்என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
இப்பகுதியில் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருக்கக் கூடும் என்றும் போலீஸார்சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் தீவிர வேட்டை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications