ஜார்க்கண்ட் எம்.பி. சுட்டுக் கொலை
ஜாம்ஷெட்பூர்:ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பியுமான சுனில் மஹதோ, நக்சலைட்டுக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹோலி பண்டிகையை ஒட்டி ஜாம்ஷெட்பூரில் கால்பந்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டிக்கு சுனில் மஹதோ சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
போட்டி நடந்து கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுனில் மஹதோவை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர்.இதில் மஹதோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மஹதோவின் இரு பாதுகாவலர்கள், கட்சிக்காரர் ஒருவர் படுகாயமடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள்அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
மஹதோவின் உடல் துப்பாக்கிச் சூட்டில் சல்லடையாக துளைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 15 தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களுடன் வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டது. அந்த இடமே பெரும் அமளி துமளியாக காணப்பட்டது. இதைப் பயன்படுத்திதீவிரவாதிகள் தப்பி விட்டனர்.
மஹதோ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அதிர்ச்சியும், கண்டனமும்தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட்டில் பந்த்:
இதற்கிடையே சுனில் மஹதோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் இன்று அம்மாநிலத்தில் முழு அடைப்பு நடத்தி வருகின்றனர்.
மஹதோவுக்கு சரியான முறையில் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று கூறி ஆங்காங்கே போராட்டமும் நடந்து வருகிறது. பல இடங்களில் பேருந்துகள் மறிக்கப்பட்டு மறியல் போராட்டம்நடந்துள்ளது. கண்டனப் பேரணிகளும் நடந்துள்ளன.
இந்த நிலையில் மஹதோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில முதல்வர் மது கோடா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications