உயரதிகாரிக்கு ரூம் போட வந்த பஸ்!!
கோவை:அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளருக்கு, அரசு விருந்தினர் மாளிகையில் ரூம் புக் செய்வதற்காக ஒரு பேருந்தை எடுத்துக் கொண்டு வந்த கூத்து கோவையில் நடந்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நேற்று மாலையில் ஒரு பேருந்து வந்தது. அந்தப் பேருந்தில் டிரைவர் மற்றும் இன்னொரு நபரைத் தவிர வேறு யாரும் இல்லை. சேலம் டூ திண்டிவனம் என்ற போர்டும் பஸ்சில் இருந்தது.
திடீரென ஒரு பேருந்து உள்ளே நுழைந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்திலிருந்து இறங்கிய டிரைவர் அங்கிருந்த டீ கடைக்குப் போய் டீ ஆர்டர் செய்து குடிக்க ஆரம்பித்தார். அவருடன் வந்த நபர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்றார்.
பயணிகள் யாரும் இல்லாமல் ஒரு அரசுப் பேருந்து வந்ததும், அதில் இருந்த நபர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் சென்றால் குழப்பமடைந்த போலீஸார் டிரைவரிடம் என்ன விஷயம் என்று கேட்டனர்.
அதற்கு அந்த டிரைவர் சொன்ன பதில் அங்கிருந்தவர்களைத் தூக்கி வாரிப் போட்டது. அதாவது, அந்த அரசுப் போக்குரவத்துக் கழகத்தின் பொது மேலாளர் கோவைக்கு வருவதால் அவர் தங்குவதற்கு அரசு விருந்தினர் மாளிகையில் அறை புக் செய்வதற்காக அவர்கள் வந்தனராம்.
டிரைவருடன் வந்தவர் போக்குவரத்துக் கழக ஊழியராம். ஒரு தனி நபருக்கு ரூம் போட ஒரு அரசுப் பேருந்தையே தூக்கிக் கொண்டு வந்த கொடுமையைக் கேட்டு அங்கிருந்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டு, அந்த அதிகாரியை திட்டித் தீர்த்து விட்டுச் சென்றனர்.
பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக ஒரு பேருந்து கேட்டால், அது இல்லை, இது இல்லை, என்று ஆயிரம் காரணம் கூறும் நமது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இப்படி ஒரு அதிகாரிக்காக பேருந்தை துஷ்பிரயோகம் செய்த கொடுமையை எங்கு போய்ச் சொல்வது!












Click it and Unblock the Notifications