ஆஸி. ரன் குவிப்பு: மழையால் ஆட்டம் பாதிப்பு
செயின்ட் ஜான்ஸ் (ஆண்டிகுவா):
உலககோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 322 ரன் குவித்தது. மாத்யூ ஹைடன் அதிரடியாக ஆடி சதம் போட்டார். ஆனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்யவுள்ளது.
சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆண்டிகுவாவின், செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், ஆஸ்திரேலியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.
![]() |
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் லாரா ஆஸ்திரேலியாவை பேட்டிங்க செய்ய அழைத்தார். ஹைடனும், கில்கிறைஸ்ட்டும் அதிரடியாக பேட்டிங்கைத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது ஆஸ்திரேலியா. ஆனால் பின்னர் சுதாரித்துக் கொண்டு ரன் குவிக்க ஆரம்பித்தனர்.
மாத்யூ ஹைடன் அதிரடியாக ஆடி 158 ரன்கள் குவித்தார். தொடர்ச்சியாக அவர் அடித்த 2வது சதம் இது. மைக்கேல் கிளார்க் 41 ரன்னும், பாண்டிங் 35 ரன்னும், வாட்சன் 33 ரன்னும் எடுத்தனர்.
ஆட்டம் முடிய போகும் நேரத்தில் 46.2 வது ஒவரில் மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் போட்டி தொடர்ந்தது. ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன் குவித்தது.
இதையடுத்து மழை மீண்டும் குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டம் இன்று மீண்டும் நடக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணி இன்று பேட்டிங் செய்யும்.
இன்று தெ.ஆப்பிரிக்கா, இலங்கை மோதல்
இன்றைய போட்டியில் சம பலம் பொருந்திய இலங்கை அணியும், தென்ஆப்பரிக்கா அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்தில் இருப்பதால் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இருப்பினும் இலங்கை அணியின் கையே தற்போதைக்கு ஓங்கியிருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.













Click it and Unblock the Notifications