ஜெ. வீட்டில் அதிமுகவினர் திடீர் முற்றுகை
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி அதிமுக செயலாளர் மொசைக் ஜெகதீசன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் சென்னை மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியலை பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் மொசைக் ஜெகதீசன் பதவி பறிக்கப்பட்டு சீனிவாசன் என்பவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டிருந்தது.
தென் சென்னை மாவட்ட செயலாளர் கலைராஜன்தான் ஜெகதீசனை பழி வாங்கி விட்டார் என ஜெகதீசனின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனை முற்றுகையிட்டனர்.
நேற்று காலை சிறுதாவூர் பங்களாவிலிருந்து போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதா வந்தபோது கோஷம் எழுப்பினர். பின்னர் மாலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், ஜெயகுமார் ஆகியோர் அவர்களை சந்தித்து உங்கள் மனுக்களை கொடுங்கள் என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவிடம் தான் கொடுப்போம் என கூறி விட்டனர்.
பின்னர், ஜெகதீசன் உள்ளிட்ட 5 பேரை மட்டும் ஜெயலலிதா உள்ளே வருமாறு அழைத்தார். அவரகளது மனுக்களை பெற்ற கொண்ட ஜெயலலிதா, முன்னாள் செயலாளர் மீது ஏராளமான புகார் வந்ததால் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் செயல்பாடுகளை பார்த்தபின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனால் அமைதி அடைந்த அவர்கள் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications