கருணாநிதிக்கு அகந்தை-கர்நாடக பாஜக து.மு!
பெங்களூரு:காவிரி பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு இடமில்ல என முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டிருப்பது அவரது அகந்தையைக் காட்டுகிறது என கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஒப்புக் கொண்டார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால் தான் அப்படிச் சொல்லவில்லை, உகாதி வாழ்த்துதான் குமாரசாமிக்குக் கூறியிருந்தேன். காவிரி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று கருணாநிதி விளக்கியிருந்தார்.
இதுகுறித்து கர்நாடக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் தரம் சிங் மற்றும் சில உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். குமாரசாமி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரினர்.
அதற்கு துணை முதல்வர் எடியூரப்பா பதிலளித்தார். அவர் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி அகந்தையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது கன்னடர்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையே நிலவும் நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக உள்ளது. பேச்சு வார்த்தைக்கு கருணாநிதி தயாராக இல்லை என்றால் நாங்கள் அதை எதிர்க்க போவது இல்லை.
இதற்காக எங்கள் முதல்வர் குமாரசாமியை சாதாரணமாக கருதக் கூடாது என்றார் எடியூரப்பா.