கள்ளக்காதல் சந்தேகம்: 3 பெண்கள் குத்திக் கொலை
தூத்துக்குடி:மனைவிக்கு கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகித்த நபர், தனது மனைவி, அவரது தங்கை, பெரியம்மா ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொன்ற நபர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொளக்கட்டான்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கும் அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
இருவருக்கும் 3 குழந்தைகளும் உள்ளனர். கல்யாணத்திற்குப் பின்னர் மனைவியோடு மும்பைக்கு சென்றார். அங்கு தாராவி பகுதியில் இட்லிக் கடை வைத்து பிழைத்து வந்தார். அவருடன் பெரியப்பா மகன் மாரிமுத்து என்பவரும் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், மாரிமுத்துவுக்கும், தனது மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக அவருக்கு சந்தேகம் வந்தது. இதனால் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கொளக்கட்டான் குறிச்சிக்குத் திரும்பினார்.
மனைவி, குழந்தைகளை மாமியார் வீட்டில் விட்டு விட்டு அவர் மட்டும் மும்பை திரும்பினார். சமீபத்தில் ஊர் திருவிழாவுக்காக வந்திருந்தார். அப்போது மனைவியைப் பார்த்தார். பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
கோபம் தலைக்கேற மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரியம்மாளை சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த தனது பெரியம்மா பேச்சியம்மாளையும் சரமாரியாக வெட்டினார். அப்படியும் கோபம் தணியாமல், மனைவியின் சகோதரி தேவியையும் அவர் சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் மூன்று பெண்களும் துடித்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருவர் அங்கேயே இறந்து விட பேச்சியம்மாள் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்ததும் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொள்ள முயன்றார் பாண்டி. இதில் அவரும் காயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.