கை கோர்க்கும் ராமதாஸ், வைகோ, திருமா!
மதுரை: மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறுகையில்,
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு இடம் பெறும் நிலை ஏற்படும்.
தேசிய ஒருமைப்பாட்டை மதிக்கும் வகையில் கேரள அரசின் நடவடிக்கை இல்லை. நமக்கு நியாயமான உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது.
அரபிக்கடலில் 2,300 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக கலக்கிறது. அதிலிருந்து 200மில்லியன் கன அடி தண்ணீரை தர கேரள அரசிற்கு மனமில்ைல.
இந்த பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த உடனேயே தமிழக அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும், அல்லது கோர்ட்டு அவமதிப்பு வழக்காவது தொடர்ந்திருக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.
எனவே முல்லை பெரியாறு பிரச்சனையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு மதுரையில் வரும் 31ம் தேதி நடத்த இருக்கிறோம்.
இதற்கு நான் தலைமை தாங்குகிறேன். மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார். வைகோ, திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசிகிறார்கள் என்றார்.
திமுகவுடன் கடும் மோதலில் குதித்துள்ள ராமதாஸும், திமுக கூட்டணியில் இருக்கிற திருமாவளவனும், அதிமுக கூட்டணியில் இடம் ெபற்றுள்ள வைகோவுடன் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ள இந்த மாநாடு, அரசியல் வட்டாரத்திலும் புதிய சூழலை உருவாக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.