சேப்பல் புகார்: வெங்சர்க்கார் விளக்கம்
ஜெய்ப்பூர்:இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தானும், மூத்த வீரர்களும் முட்டுக்கட்டை போட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ள புகார் குறித்து கருத்துக் கூற இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் மறுத்து விட்டார்.
இந்திய அணியின் உலககக் கோப்பைத் தோல்வி குறித்து பெங்களூரைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளருக்கு சேப்பர் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். அதில் மூத்த வீரர்களும், இந்திய வீரர்கள் தேர்வுக் குழுவின் தலைவர் வெங்சர்க்காரும், இளம் வீரர்களைத் தேர்வு செய்ய முட்டுக்கட்டையாக இருந்தனர்.
சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக அணிக்குத் தேவை என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் அதை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர்களை விளையாட கேப்டன் டிராவிடும் மற்ற மூத்த வீரர்களும் அனுமதிக்கவில்லை.
தங்களது இடம் இதனால் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இவ்வாறு அவர்கள் நடந்து கொண்டனர். இவை எல்லாம் என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தி விட்டன என்று சேப்பல் கூறியிருந்தார்.
சேப்பலின் இந்தப் புகார் குறித்து ஜெய்ப்பூருக்கு வந்திருந்த வெங்சர்க்காரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சேப்பல் என்ன சொல்லியுள்ளார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. எனவே அதுகுறித்து என்னால் கருத்து கூற முடியாது.
சிறந்த வீரர்களைத்தான் அணியில் சேர்க்கிறோம். சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கே எதிர்காலத்திலும் வாய்ப்பு அளிக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் வெங்சர்க்கார்.