நாளை பந்த்: ஸ்தம்பிக்கப் போகும் தமிழகம்!பஸ், லாரி, ஆட்டோ ஓடாது-படமும் கிடையாது!!
சென்னை:27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து தமிழகத்தில் நாளை பந்த் நடைபெறவுள்ளதால், வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும். கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்படுகின்றன.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பந்த்தின்போது பஸ், ஆட்டோ, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்படும்.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். தியேட்டர்களிலும் திரைப்படங்கள் ரத்து செய்யப்படும். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில், விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கோரியுள்ளது. எனவே இவையும் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து முற்றிலும் முடங்கும் என்று தெரிகிறது.
வெளியூர் பேருந்துகள் அனைத்தும் நாளை காலை 6 மணிக்குள் தத்தமது ஊர்களுக்கு செல்லும் வகையில் இன்று இரவு முன்கூட்டியே கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் உள்பட அனைத்து வகை லாரிகளும் நாளை ஓடாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதேபோல வெளி மாநிலங்களுக்கும் நாளை லாரிகள் இயக்கப்பட மாட்டாது.
பந்த்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளால் தனியார் தொழில் நிறுவனங்களும் நாளை செயல்படாது.
பந்த்துக்கு வியாபாரிகள் சங்கங்கள் ஆதரவு தருவதாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
முழு அடைப்பையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள 86 ஆயிரம் போலீஸாரில், 1200 பேர் பீகார் மற்றும் உ.பி.க்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர மற்றவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
சென்னை நகரில் மட்டும் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பந்த்தின்போது அத்தியாவசியப் பணிகளான பால் உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவை தொடர்பான வாகனங்கைள இயக்கத் தடை இல்லை.












Click it and Unblock the Notifications