கருணாநிதி வெளியே சென்றது ஏன்?
சென்னைமுதல்வர் கருணாநிதி சிறுநீர் கழிக்கச் சென்றது தொடர்பாக சட்டசபையில் இன்று காரசாரமான விவாதம் நடந்தது.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது முதல்வர் கருணாநிதி எழுந்து வெளியே சென்றார். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முதல்வர் வெளிநடப்பு செய்கிறாரா என்று உட்கார்ந்தபடியே கேட்டனர்.
இதைக் கேட்டதும் அமைச்சர் துரைமுருகன் கோபத்துடன் எழுந்து, முதல்வர் எழுந்து வெளியே செல்லும்போது அதிமுகவினர் உட்கார்ந்து கொண்டு பேசுவது சரியல்ல, கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள், ஜாக்கிரதை என்றார்.
இதைக் கேட்டதும் கோபமான ஓ.பன்னீர் செல்வம், ஒரு அமைச்சர் ஜாக்கிரதை என்று கடுமையாகப் பேசலாமா என்றார். அதற்கு துரைமுருகன், நீங்கள் பேசிய வார்த்தைகளுக்கு இது மென்மையான வார்த்தைதான் என்றார்.
அப்போது முதல்வர் மீண்டும் உள்ளே வந்தார். உறுப்பினர்களின் வாதத்தைக் கேட்ட அவர் குறுக்கிட்டு, நான் எப்போதும் எதிர்க்கட்சியினரை மதிப்பவன். முன்னாள் அமைச்சர் (ஓ.பன்னீர் செல்வம்) முன்னாள் முதல்வராகவும் இருந்தவர். தற்போது அவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கிறார்.
எல்லோருக்கும் இயற்கை உபாதை உண்டு. நான் வெளிநடப்புச் செய்யவில்லை. வெளியே அனுப்பத்தான் சென்றேன் என்றார். இதைக் கேட்டதும் சபையே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. இதனால் சர்ரென எழுந்த சூடான விவாதம் சட்டென்று அடங்கி சபை அமைதியனது.












Click it and Unblock the Notifications