பந்த்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை
இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை எதிர்த்து நாளை தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனறு கோரி சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது.
பல்வேறு பொது நலன் தொடர்பாக வழக்கு தொடருபவர் டிராபிக் ராமசாமி. தற்போது பந்த்தை எதிர்த்து வழக்கு போட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நலன் வழக்கில்,
அரசியல் கட்சிகளுடன் இணைந்து மாநில அரசு பந்த் போன்ற போராட்டங்களில் ஈடுபட முடியாது. இவ்வாறு போராட்டம் நடத்துவது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
இந்தப் போராட்டத்தால் எந்தத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. ரயில், விமானப் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இது சட்டவிரோதமாகும்.
எனவே இந்தப் போராட்டத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்து தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் ராமசாமி.
இந்த மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என ராமசாமியின் வழக்கறிஞர் கோரியதால், நீதிபதிகள் முகோபாத்யாயா, தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என தலைமை நீதிபதி ஏ.பி.ஷா. உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பெஞ்ச் ராமசாமி மனுவை விசாரித்தது. பின்னர் பந்த் நடத்த இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications