ஜெ. பேச்சு நியாயமற்றது: கருணாநிதி
சென்னை:பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி வருவது நியாயமற்றது, தவறானது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அனுபவம் வாய்ந்த, மூத்த வக்கீல்களை மத்திய அரசு நியமிக்கவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர்தான் விளக்க வேண்டும்.
இருப்பினும், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடுச் சட்டம் குறித்த வழக்கின்போது உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதங்களைப் பார்த்தால் ஜெயலலிதா கூறுவது தவறானது என்பது தெரிய வரும்.
இந்த வழக்கில் மத்திய அரசும், அதன் வழக்கறிஞர்களும் அலட்சியமாக இருந்தார்கள் என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்க முடியாது.
27 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில், ஜெயலலிதா கூறியுள்ளதைப் போல பலவீன வக்கீல்களை மத்திய அரசு நியமிக்கவில்லை. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் சாதாரண வழக்கறிஞர் அல்ல, ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், மத்திய அரசின் சார்பாக ஆஜராகி வாதாடியவர்.
1990ம் ஆண்டு பத்திரிக்ைக ஒன்றுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில், இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமி லேயர் பிரிவை நீக்க வேண்டும் எனக் கூறியவர் ஜெயலலிதா.
அதேபோல, வி.பி.சிங் அரசு மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்திய பின்னர், வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக அதிமுக வாக்ளித்தது.
1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளதாக கூறுவது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பலம் சேர்ப்பதாகவே அமையும்.
எனவே இதிலிருந்தே, ஜெயலலிதாவின் உள்நோக்கம் என்ன என்பதை பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
இட ஒதுக்கீடு சட்டம் தொடர்பாக அதிமுகவிடம் மத்திய அரசு முதலில் ஆலோசனை கோரியது. ஆனால் அதிமுக கொடுத்த யோசனைகளை அது பின்னர் நிராகரித்து விட்டது என்று இப்போது கூறும் ஜெயலலிதா, அதை ஏன் அப்போதே மத்திய அரசிடம் ஆட்சேபிக்கவில்லை.
இட ஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவது தவறானது. திராவிட இயக்கத்தின் முதன்மைக் கொள்கையான இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக ஆற்றியுள்ள பணிகள் பல என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications