கணவர் மரணம்: மனம் உடைந்த நேபாள பெண் தற்கொலை
சென்னை:குளத்தில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்ற முயன்று கணவர் உயிரிழந்ததால் மனம் உடைந்த நேபாள நாட்டுப் பெண் அதே குளத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கூர்க்காவாக வேலை பார்த்து வந்தவர் நேபாளத்தைச் சேர்ந்த ருத்ரா பெளடல். தனது மனைவி கல்பனாவுடன் கல்லூரிக்கு அருகே குடியிருந்து வந்தார்.
அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு கூர்க்காவின் 10 வயது மகன் அருகில் உள்ள குளத்தில் மூழ்கி விட்டான். அவனை மீட்க ருத்ரா, குளத்தில் குதித்து சிறுவனை மீட்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். அந்தப் பையனும் பரிதாபமாக இறந்து போனான்.
சிறுவனைக் காப்பாற்றப் போய் கணவரும் இறந்ததை அறிந்த கல்பனா மனம் உடைந்தார். பெரும் சோகத்தில் இருந்து வந்த அவர் நேற்று அதிகாலை கணவர் மூழ்கி இறந்த குளத்துக்குச் சென்று குதித்து விட்டார்.
சிறிது நேரத்திலேய நீரில் மூழ்கி அவரும் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications