ரூ.1,100 கோடியில் நிலத்தடி மின் கேபிள்
சென்னை:கோவை, மதுரை, திருச்சி,நெல்லை, சேலம் ஆகிய மாநகரங்களில் ரூ. 1,100 கோடியில் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் எரிசக்தி மற்றும் நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர்,
தமிழகத்தில் விவசாயிகளுக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது வருடத்திற்கு 40,000 விவசாயிகளுக்கு மோட்டர் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வருவதப இனி 40,500 ஆக உயர்த்தப்படும். இதை 50,000 உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தற்போது மின்துறைக்கு 50 ஆண்டுகளாகின்றன.1957ல் பெருந்தலைவர் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு முதல்வர் பொன்விழா நடத்த இருக்கிறார். மின்துறையின் ஆண்டு வருமானம் ரூ.18,165 கோடி, இதற்கு 21,729 செலவிடப்படுகிறது. ரூ.3,000 கோடி கூடுதலாக செலவிட்ப்படுகிறது. இந்நிலையிலும் ஏழைகளுக்கு இலவச மின்சார திட்டம் தொடரும்.
தமிழ்நாட்டில் 325 இடங்களில் புதிதாக துணைமின்நிலையங்கள் அமைக்கப்படவிருக்கிறது. இதனால் எந்த இடத்திலும் மின்தடை, மின்னழுத்தம் ஏற்படாது. கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் கேபிளை பூமிக்கடியில் பதித்து மின் வினியோகம் செய்யும் திட்டம் ரூ.1,100 கோடியில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவிலேயே மின் இணைப்பு இல்லாத கிரமம் இல்லை என்ற பெருமையோடு தமிழ்நாடு முதல் இடத்திலுள்ளது.
ரஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த 26 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க முன் வந்துள்ளன. இதன் மூலம் 40,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.1 லட்சத்து 60,000 கோடி முதலீடு செய்யப்படும்.
தற்போது மின்சார துறையில் 20,600 பேர் ஒப்பந்த ஊழியர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 6,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மற்றவர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றார்.