கிரிக்கெட் வீரர்களுக்கு வாரியம் திடீர் தடை
ராஜ்காட்:உலகக் கோப்பைப் போட்டி தொடர்பாக பத்திரிக்கைகள், டிவி ஆகியவற்றுக்கு பேட்டி கொடுக்கவோ, அறிக்கை கொடுக்கவோ கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து மூத்த வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
சேப்பலுக்குப் பதிலளித்து சச்சின் டெண்டுல்கர் காட்டமான பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களது கருத்துக்களை கிரிக்கெட் வாரியத்திடம்தான் வீரர்கள் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு மாறாக பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுப்பதோ, டிவிகளுக்கு பேட்டி கொடுப்பதோ கூடாது. டெண்டுல்கர் அளித்த பேட்டியை நான் பார்க்கவில்லை. அதுகுறித்து எனக்குத் தெரியாது. கருத்து கூறவும் விரும்பவில்லை.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி குறித்து அணியின் மேலாளர் சஞ்சய் ஜெகதாலே அறிக்கை தரவுள்ளார். அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.
புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து வாரியத்தின் செயற்குழுதான் முடிவு செய்யும் என்றார் ஷா.