அதிமுக எம்எல்ஏ வீடு சூறை-அப்பாவுக்கு அடி
ஒரத்தநாடு:தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டில் உள்ள அதிமுக எம்எல்ஏ வி.பி. கலைராஜனின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. கலைராஜனின் வயதான தந்தையும் தாக்கப்பட்டார்.
சென்னை தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கலைராஜன். சட்டசபையில் நேற்று ஏற்பட்ட பெரும் அமளி காரணமாக அவர் உள்பட 4 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கலைராஜனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டில் உள்ள அவரது வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது.
இந்த வீட்டில் கலைராஜனின் தந்தை பட்டுச்சாமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு நள்ளிரவு 1 மணிக்கு மேல் 20 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து, வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது.
பட்டுச்சாமியையும் அக்கும்பல் தாக்கியது. அவர் போட்ட கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.
சம்பவம் குறித்து அறிந்ததும் அதிமுகவினர் அங்கு கூடினர். போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பட்டுச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தகவல் அறிந்த கலைராஜன், சென்னையிலிருந்து தஞ்சை மாவட்ட எஸ்.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.
தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்தவர்கள் அத்தனை பேரும் திமுகவினர் என்று பட்டுச்சாமியும், அதிமுகவினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications