ஜெ.வின் சவாலை சந்திக்கத் தயார்: பாலு
சென்னை: தன் மீது ஜெயலலிதா கூறியுள்ள புகார்களை மறுத்துள்ள மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, இதுதொடர்பாக ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் சந்தித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும் சவால் விட்டுள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதா என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா கூறியுள்ள கிங் கெமிக்கல்ஸ் நிறுவனமும், கிங் ஹைபவர் நிறுவனமும் சுமார் 40,000க்கும் மேற்பட்ட மக்களால் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை ஜெயலலிதா வருடக்கணக்கில் நிறுத்தி வைத்திருந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. இப்போது வரை பிஐஎப்ஆர் நிறுவனத்தின் முன் போராடிவருகிறது.
இதை மறுபடியும் செயல்படுத்த எடுத்த நடவடிக்கையால் 10,000 கன அடி எரிவாயு இணைப்பை அந்த நிறுவனம் பெற்றது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 1999ம் ஆண்டு கையெழுத்தானது. கிங்ஹைபவர் நிறுவனம் 4 லட்சம் கன அடி எரிவாயு வழங்க அதே வருடம் ஜூனில் ஒப்புதல் வழங்கியது. இந்த காலகட்டத்தில் நான் அமைச்சர் பதவியில் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.
அதிகாரம் மூலம் நான் லாபம் அடைய நினைத்திருந்தால் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த போதே எரிவாயு இணைப்புகளை வாங்கியிருக்க முடியும். ஆனால் அதற்கு அவசியம் இல்லை.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அறிக்கை கேலிக்கூத்தாக இருக்கிறது. இது அவரது வக்கிரபுத்தியை காட்டுகிறது. பைக்காரா நீர்மின் திட்டத்திற்கு அனுமதி மறுத்தேன் என குற்றம் சாட்டியிருப்பது உண்மைக்கு புறம்பானது. காடுகள் அழிவதை தடுக்க மாற்று வழி கூற வேண்டும் என கேட்டபோது பதிலளித்திருந்தால் அனுமதி வழங்கியிருப்பேன்.
ஜெயலலிதா சொன்ன கால கட்டத்தில் நான், எனது துறையின் கீழ் 22,000 கோடிக்கான திட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளேன். தமிழக மக்களின் மேல் மீது நான் வைத்திருக்கும் பாசம்தான் நெடுஞ்சாலை திட்டங்களாகவும்,மேம்பாலங்களாகவும், துறைமுக வளர்ச்சி திட்டங்களாகவும், ஜெயலலிதா துரோகத்தின் சவாலாக சேது சமுத்திர திட்டமாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா, மீனவர்கள் வாழ்வை குலைத்து வெளிநாட்டவர் உல்லாச மாளிகை அமைக்க முயன்றதும், ராணி மேரி கல்லூரியை தரைமட்டமாக்க முயன்றதும் என்னால் முறியடிக்கப்பட்டது.
நான் யாரை சந்திக்க சென்றாலும் அதை பற்றி பிரதமரிடமும், கலைஞரிடமும் தெரிவிப்பது எனது கடமையாகும். எனவே ஜெயலலிதா எந்த மேடையில் சந்திக்க விரும்புகிறார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதை மக்களும் எதிர்ப்பார்க்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications