டெல்லியில் பரபரப்பு - 183 பயணிகளுடன்வானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம்
டெல்லி:ஷாங்காய் நகரிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் சுமார் 1 மணி நேரம் வானில் வட்டமடித்தது. பின்னர் தரையிறங்கியபோது முன்பக்க டயர் வெடித்து தரையில் உரசியபடி நின்றதால் பரபரப்பு பன்மடங்கு அதிகரித்தது.
ஷாங்காய் நகரிலிருந்து பாங்காக் வழியாக டெல்லிக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் 183 பேர் இருந்தனர். விமானம் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. 3 முறை முயன்றும் தரையிறக்க முடியவில்லை. சுமார் 1 மணி நேரமாக விமானம் வானில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிள் பெரும் பீதியடைந்தனர்.
பின்னர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பின்னர் விமானம் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் விமானம் ஓடியபோது, விமானத்தின் முன் பக்க டயர் வெடித்தது. இதையடுத்து விமானம் தரையில் உரசியபடிய நிலை தடுமாறி நின்றது.
இருப்பினும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பயணிகள், விமான ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர்.
விமானம் தரையில் உரசியபடி நின்றதால், அந்த விமான ஓடுபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2வது ஓடுபாதை திறந்து விடப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து விசேஷ கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் பின்னர் விமானம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும்.
இந்த பதட்டம் காரணமாக இன்று காலை சுமார் 3 மணி நேரம் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications