அகதிள் முகாமில் 3 கடல் புலிகள் கைது
ராமநாதபுரம்:இலங்கையிலிருந்து வந்த அகதிகளுடன் கலந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்த 3 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்தனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மண்டபம் முகாமுக்கு வந்து சேர்ந்தவர்கள் தேவஜோதீஸ்வரன், சுகந்தன், ஜஸ்டின் ராஜ் ஆகியோர். இவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியபோது 3 பேரும் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. கடல் புலிகள் பிரிவின் புலனாய்வுப் பிரிவைச் சேரந்தவர்கள் இவர்கள்.
கொழும்பில் தங்கியிருந்த அவர்கள் அங்கிருந்தபடி இலங்கை ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து தலைமையகதத்திற்குத் தகவல் கொடுப்பார்களாம்.
சமீப காலமாக இலங்கை ராணுவத்தின் நெருக்குதல் அதிகரித்து விட்டதால் 3 பேரும் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளனர்.
அவர்களிடம் மேல் விசாரணை நடத்துவதற்காக சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.