முட்டை கொடுத்த சத்து சேர்த்த முதல்வர்
சென்னை:காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோர் அறிமுகப்படுத்திய மதிய உணவு, சத்துணவுத் திட்டத்தில் முட்டையை சேர்த்து உண்மையான சத்துணவாக அதை மாற்றிய பெருமை முதல்வர் கருணாநிதியையே சாரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில், பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது சத்துணவு குறித்து உறுப்பினர்கள் சுவாரஸ்யமான வாக்குவாதத்தை நடத்தினர்.
அதிமுக உறுப்பினர் மலரவன் பேசுகையில், சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். இதைத் தொடர்ந்தே தொடக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பெருந்தலைவர் காமராஜர்தான் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதைத்தான் எம்.ஜி.ஆர். விரிவுபடுத்தினார் என்றார்.
அதற்குப் பதிலளித்த மலரவன், நான் பேசுவது சத்துணவுத் திட்டம் குறித்து. நீங்கள் சொல்வது மதிய உணவுத் திட்டம் பற்றி என்றார்.
மலரவன் பேசி முடித்ததும் எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் யசோதா, சத்துணவுத் திட்டம் பிறப்பதற்கு மதிய உணவுத் திட்டம்தான் கரு என்றார்.
விவாதம் சூடாவதைப் பார்த்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் எழுந்து, சத்துணவுடன் முட்டையை சேர்த்துக் கொடுத்து அதை உண்மையான சத்துணவாக மாற்றிய பெருமை முதல்வர் கருணாநிதியையே சாரும் என்றார்.
இதைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.