சியாச்சின் பனி மலையில் விழுந்து நொறுங்கியராணுவ ஹெலிகாப்டர்-2 விமானிகள் பலி
ஸ்ரீநகர்:இமயமலையின் சியாச்சின் பகுதியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலியாயினர்.
உலகின் மிக உயரமான போர்க் களம் என்று குறிப்பிடப்படும் பகுதி சியாச்சின். ஆண்டின் ெபரும்பாலான காலம் பனியால் மூடப்பட்ட இந்த பிரதேசத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் படைகளை குவித்து வைத்துள்ளன.
இங்கு எதிரிகளின் தாக்குதலால் உயிரிழப்பதைவிட இயற்கையின் சீற்றத்துக்கு பலியாகும் வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
இந்தப் பகுதிக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைப்பாக விளங்குபவை சீட்டா ரக ஹெலிகாப்டர்கள்.
உணவு, ஆயுதங்கள், எரிபொருள், உடைகள் என அனைத்து வகையான போக்குவரத்தும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் மூலமே நடந்து வருகிறது.
இந் நிலையில் இன்று காலை வழக்கம்போல பேஸ் கேம்பில் இருந்து கிளம்பிய சீட்டா ரக ஹெலிகாப்டர் சியாச்சின் மலைப் பகுதியை அடைந்தவுடன் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து பிற ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அப்போது அந்த ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. அதிலிருந்த 2 விமானிகளும் பலியாகிவிட்டனர்.