கடவுள் நஷ்டஈடு தர வேண்டும் என்று கூற மாட்டேன்-கருணாநிதி
சென்னை:கிராம நிர்வாகிகள் வந்த வேலையை பார்த்திருந்தால் விபத்து நடந்திருக்காது. கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டதால் கடவுள் நஷ்டஈடு தரவேண்டும் என கூறமாட்டேன் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் காஞ்சி விபத்து குறித்து பல்வேறு கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது அதிமுக, உறுப்பினர் சேகர்பாபு பேசுகையில்,
தமிழகத்தில் 1,100 ஆளில்லாத லெவல் கிராசிங் உள்ளது. இதற்கு பணியாளர் நியமிக்கப்பட்டால் தான் விபத்தினை தடுக்க முடியும் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ரூ.2 லட்சம் அறிவித்து, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று கூறியுள்ளார். மத்திய அரசு ரூ.50,000 அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி போதாது. அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றார்.
இதுபோல் பாமக, மார்க்சிஸ்ட், இநதிய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிக நிதியுதவி செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இதற்கு பதிலளித்த முதல்வர்,
விபத்து என்பது எதிர்பாராத ஒன்று, அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் 80 சதவீத விபத்துக்களை தடுக்க முடியும்.
கடந்த 5 மாதங்களில் 2வது முறையாக விபத்து நடந்துள்ளது. இதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் மற்றும் வேலு ஆகியோரை குறை சொல்லக் கூடாது.
கிராம நிர்வாகிகள் வந்த வேலையை பார்த்திருந்தால் விபத்து நிகழ்ந்திருக்காது. அவர்கள் கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து நடந்ததால் கடவுள் நஷ்டஈடு தர வேண்டும் என கூற மாட்டேன்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என நான் கூறமாட்டேன். ஞானசேகரன் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். சமீப காலமாக ஒரு போட்டி வநதுள்ளது. ரூ.1 லட்சம் நிதியுதவி என்றால் ரூ.1.5 லட்சம் என ஏலம் விடுவது போல் சம்பிரதாயம் ஏற்பட்டுள்ளது.
அவர்களது குடும்பத்திற்கு அரசு வேலை அறிவித்திருப்பதே அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பை அளிக்கும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications