13 வயது சிறுமி கற்பழித்து கொடூர கொலை
சேலம்:சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகள் மேனகா (13). 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிந்து விட்டதால் விடுமுறையில் தனது பாட்டில் பழனியம்மாள் வீட்டுக்குச் சென்றார்.
நேற்று மாலை பழனியம்மாள் பால் வாங்க வெளியே சென்றிருந்தார். மேனகா மட்டும் வீட்டில் இருந்தார். பால் வாங்கி விட்டுத் திரும்பிய பழனியம்மாள் வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் குழப்பமடைந்தார். அக்கம் பக்கத்தினரைக் கூப்பிட்டுக் கொண்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தார்.
அப்போது அங்கு மேனகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சமயத்தில் வீட்டுக்குள் ஒளிந்திருந்த ஒரு வாலிபர் அங்கிருந்து ஓட முயன்றார்.
அவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேனகாவை அந்த வாலிபர் கற்பழித்துப் பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிடிப்பட்ட வாலிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் பெயர் மகேஷ் (27) என்றும் நெல்லையில் லாரி டிரைவாக இருக்கிறார் என்றும் தெரிய வந்தது.
மேனகா குடும்பத்தினர் கிருஷ்ணகிரியில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் குடியிருந்த மகேஷ், மேனகாவை ஒரு தலையாக காதலித்துள்ளார். ஆனால், அதற்கு அவள் குழந்தை, படிக்க வேண்டும் என மேனகாவின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.
மேனகா குடும்பத்தினர் சேலம் வந்திருப்பது தெரிந்து இங்கு வந்து கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
ஆனால் போலீஸார் இதைப் பற்றி தகவல் தர மறுக்கின்றனர். கொலையாளி இன்னும் கிடைக்கவில்லை, இன்று மாலைக்குள் பிடித்து விடுவோம் என்கின்றனர்.
ஆனால், அந்தப் பகுதி மக்களோ கொலையாளியை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துவிட்டோம் என்றனர்.












Click it and Unblock the Notifications