இட ஒதுக்கீடு-நாடாளுமன்றத்தை உடனேகூட்ட பிரதமருக்கு கருணாநிதி அவசர கடிதம்
சென்னை:27 இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சட்ட நிபுணர்களுடனும் வழக்கறிஞர்களுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த 12ம் தேதி அனுப்பிய கடிதத்தில் பல வகையான நடவடிக்கைகளை பட்டியலிட்டு இருந்தேன்.
இட ஒதுக்கீடு மீதான தடையுத்தரவை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் நமக்குள்ள ஒரே வழி, உடனடியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி, இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விவாதம் நடத்தி, பொருத்தமான, சரியான நேரத்தில் முடிவெடுப்பது தான்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுமாறு கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இட ஒதுக்கீடு தொடர்பாக இப்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் அதிக சஞ்சலம் அடைந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உதவிக் கரம் நீட்டுவது நமது கடமை. அவர்களை கைவிட்டுவிடக் கூடாது.
எனவே இந்த ஆண்டே உயர் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த கடிதங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், சட்ட மந்திரி பரத்வாஜ் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications