துரத்தி துரத்தி அடித்த கணவன்;மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை!
விழுப்புரம்:கணவன் துரத்தி துரத்தி அடித்ததால் மனம் வெறுத்துப் போன மனைவி கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருவெண்ணை நல்லூரை அடுத்து உள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரது மனைவி லட்சுமி (22). இவர்களுக்கு 2 மாதங்ளுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது.
லட்சுமி சற்று கருப்பாக இருப்பார். இதனால் அவரை செந்தில்முருகனுக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி மனைவியிடம் நீ கருப்பாக இருக்கிறாய், உன்னைப் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார்.
முதலிரவு கூட நடத்தாமல் லட்சுமியை சித்திரவதைப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், கல்யாணத்திற்குப் பின்னர் நடக்கும் தாலி பிரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 3 பவுன் நகை போட்டால்தான் ஆச்சு என்று செந்தில்முருகனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் லட்சுமியின் குடும்பம் அந்த அளவுக்கு வசதி இல்லாததால் கொடுக்க முடியவில்லை. இதனால் பெரும் கோபத்தில் இருந்தார் செந்தில்முருகன்.
இந்த நிலையில் லட்சுமியின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அதற்கும் லட்சுமியை அவரது கணவர் வீட்டார் அனுப்ப மறுத்து விட்டனர். இதனால் அவரது வீட்டுக்கு லட்சுமியின் பெற்றோர் வந்து மருமகனிடம் நியாயம் கேட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த செந்தில்முருகன் லட்சுமியின் பெற்றோர் எதிரிலேயே அவரை அடித்து நையப்புடைத்தார். அடி தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே ஓடினார் லட்சுமி. அப்படியும் விடாமல் துரத்தி துரத்தி அடித்துள்ளார் கொடூர செந்தில்முருகன்.
இதனால் மனம் வெறுத்துப் போன லட்சுமி, அப்படியே ஊரில் இருந்த விவசாயக் கிணற்றில் குதித்து விட்டார். இதில் லட்சுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸார் தகவல் அறிந்து விரைந்து வந்தனர். லட்சுமியின் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர். செந்தில்முருகன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications