தமிழக துறைமுகத்தை தாக்க லஷ்கர் திட்டம்: -உளவுப் பிரிவு எச்சரிக்கை
சென்னை:தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் பயங்கர தற்கொலை படைத் தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்த சிலர் ஊடுருவியுள்ளனர் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன்பே மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் தமிழக அரசும், காவல்துறையும் எடுக்காமல் இருப்பதாக உளவுப் பிரிவு அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முக்கியத் துறைமுகம் ஒன்றில் பெரிய அளவுக்கு தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு கராச்சியில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தற்கொலைப் படைப் பிரிவு தற்போது தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளது. எந்தத் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்படும் என தெரியவில்லை. ஆனால் மிக முக்கிய துறைமுகத்தைத் தாக்கித் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அந்தத் துறைமுகம் சென்னையாகவும் இருக்கலாம் அல்லது தூத்துக்குடியாகவும் இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு 2 மாதங்களாகியும் தமிழக காவல்துறை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று உளவுப் பிரிவு அதிருப்தி தெரிவித்துள்ளதாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கபடவில்லை என்று உளவுப் பிரிவு அதிகாரிகள் தமிழக அரசிடம் அதிருப்தி தெரிவித்துள்ளனராம்.
அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநில காவல்துறை தலைமை ஆகியவற்றுக்கு ஏற்கனவே தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் விடுதலைப் புலிகளால் தமிழகத்திற்கோ, இந்தியாவுக்கோ, இந்திய அரசியல் தலைவர்களுக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு இந்த சமயத்தில் இந்தியாவின் ஆதரவு மிகவும் அவசியம். எனவே இந்தியத் தலைவர்களை அவர்கள் குறி வைக்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு என்று உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications