தபால் துறை சேவைக்கு தனி விமானம்!!
சென்னை:இந்தியாவில் தபால் துறை சேவைக்காக தனி விமானம் வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய தபால் துறை மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. தனது சிறப்பான சேவையினால் மக்களிடம் நிலையான இடத்தை பிடித்துள்ளது. காலத்திற்கேற்ப தன் சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. விரைவு தபால் சேவை, விரைவு மணியார்டர் சேவை போன்ற சேவைகள் வர்த்தக நிறுவனங்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வர்த்தக ரீதியாக தொழில் போட்டியை சந்திக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, தனது சேவையை விரைவுப்படுத்தும் வகையில், தபால்துறைக்கு என தனி கார்கோ விமானங்களை இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒத்திக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த தனி விமான சேவை ஜூலை மாதம் முதல் தனது சேவையை தொடங்குகிறது.
முதற்கட்டமாக பகல் நேரங்களில் தனி விமானத்தில் இந்தியாவின் மற்ற இடங்களிலிருந்து சிக்கிம், மேகாலயா, மிசோரம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.
மாலை நேரங்களில் சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு இந்த சேவை அளிக்கப்படும்.
தற்போது சென்னையிலிருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு விமானங்கள் மூலம் பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த தனி விமானத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து கூடுதலான விமானங்கள் ஒத்திக்கு எடுக்கப்படும் என்றார் தயாநிதி மாறன்.












Click it and Unblock the Notifications