துபாய்: ஊர் ஞாபகத்தில் வயிற்றைக் கிழித்துதற்கொலைக்கு முயன்ற இந்தியர்
துபாய்:ஊர் திரும்ப வேலை பார்த்த நிறுவனத்தினர் மறுத்ததால், மனம் உடைந்த இந்தியர் ஷார்ஜாவில் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்தியாவைச் சேர்ந்த குமார் (20-எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை) என்பவர் ஷார்ஜாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார்.
திடீரென ஊரை விட்டுப் பிரிந்ததால் அவருக்கு ஊர் ஞாபகம் வந்து வாட்டியது. இதனால் வேலையை விட்டு விட்டு மீண்டும் தாயகம் திரும்ப முடிவு செய்த குமார், தன்னை வேலைக்குச் சேர்த்து விட்ட ஸ்பான்சரை அணுகி கூறியுள்ளார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த ஸ்பான்சர் வேலைக்கான பெர்மிட், குடியிருப்பதற்கான பெர்மிட் வாங்க நிறைய பணத்தை செலவழித்து விட்டேன். எனவே உன்னை திருப்பி அனுப்பினால் அந்தப் பணத்தை நான் எப்படி வசூலிப்பேன் என்று கூறி திருப்பி அனுப்ப மறுத்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த குமார் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரைப் பார்த்த சக ஊழியர் உடனடியாக ஷார்ஜா தொழிற்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தில், என்னை ஊருக்குத் திருப்பி அனுப்பி விடுங்கள் என நான் ஸ்பான்சரிடம் கெஞ்சினேன். ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார் என்று கூறியுள்ளார் குமார்.