சரத் கட்டும் காமராஜர் மணிமண்டபம்இன்று அடிக்கல்-கருணாநிதி வாழ்த்து
விருதுநகர்:நடிகர் சரத்குமார் மறைந்த பெருந்தலைவர் காமராஜருக்கு கட்டவுள்ள மணிமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று விருதுநகரில் கோலாகலமாக நடக்கிறது. முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து பின்னர் அதிலிருந்தும் விலகி விட்ட சரத்குமார் சமீப காலமாக அமைதியாக இருந்து வந்தார். தற்போது புதிய பாதையில் நடைபோட முடிவு செய்து விட்டார்.
இதற்கு வெள்ளோட்டமாக காமராஜர் பிறந்த விருதுநகரில் அவருக்கு மணிமண்டபம் கட்டவுள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை 4 மணிக்கு விருதுநகரில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில், சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா குத்து விளக்கேற்றுகிறார். சரத்குமார் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பூவராகவன், நாடார் சமுதாயப் பிரமுகர்கள் எஸ்.ஆர்.எஸ்.ஆதித்தன், த.வெள்ளையன், சந்திரசேகரன், விருதுநகர் நகராட்சித் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ், வி.வி.வி.ஆனந்தம், முருகன், ரத்தினவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நாடார் பேரவைத் தலைவர் நாராயணன் வரவேற்புரை ஆற்றுகிறார். புதுவை முதல்வர் ரங்கசாமி, அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுகிறார்.
நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசசாமி, தமிழ்நாடு யாதவ மகாசபைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம், சமதாக் கட்சித் தலைவர் பாஸ்கரன், இயக்குநர் சீமான் மற்றும் பல்வேறு நாடார் சமுதாயத் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
காமராஜர் மண்டப அடிக்கல் நாட்டு விழா, சரத்குமாரின் புதிய அரசியல் வாழ்க்கைக்கான அடிக்கல் நாட்டு விழாவாவாகவும் கருதப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியை படு சிறப்பாக நடத்தி முடிக்க சரத்குமார் ரசிகர் மன்றமும், நாடார் சமுதாயப் பிரமுகர்களும் படு தீவிரமாக உள்ளனர்.
இதற்கிடையே அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை விருதுநகரில் தங்கிப் பார்வையிட்டு வரும் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த விழா எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிடும் நிகழ்ச்சி அல்ல.
இந்த விழாவில், காமராஜரின் தொண்டர்கள், சிவாஜி மன்ற ரசிகர்கள், எனது மன்ற ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜாதி, மத வேறுபாடில்லாமல் அனைத்துத் தரப்பையும் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் திரளவுள்ளனர்.
காமராஜர் குறித்து இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளது. அவர் கல்வித்துறையில் ஆற்றிய சேவைகளை, சாதனைகளை இளைஞர் சமுதாயம் அறிய வேண்டியுள்ளது. காமராஜர் காலத்தில்தான் தமிழகத்தில் பல அணைகள் கட்டப்பட்டன.
நேர்மையான அரசியல்வாதியாக, அப்பழுக்கற்ற முதல்வராக அவர் வாழ்ந்ததை இன்றைய இளைய சமுதாயம் அறிய வேண்டும்.
இந்த விழாவில் அரசியல் கிடையாது. நான் அரசியல் கட்சித் தொடங்கப் போவதற்கான அடிக்கல் நாட்டு விழா இது என்றும் கூறக் கூடாது. அதற்கான இடம் இதுவல்ல. நான் அரசியலில் 12 ஆண்டு அனுபவம் உள்ளவன். கலைஞரிடம் கற்ற அரசியல் அனுபவமும் உள்ளது.
நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் அதன் அடித்தளம் மிகப் பிரமாண்டமாக இருக்கும்.
விழாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் வருகிறார். இந்த மணிமண்டபம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்றார் சரத்குமார்.
பின்னர் நிகழ்ச்சி சிறப்புற வாழ்த்தி முதல்வர் கருணாநிதி அனுப்பிய செய்தியையும் செய்தியாளர்களிடம் வாசித்தார் சரத்குமார். அந்த வாழ்த்துச் செய்தியில், பெருந்தலைவர் காமராஜருக்கு தாங்கள் விருதுநகரில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நடத்துவதறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்தப் பணி விரைவில் சிறப்பாக முடிவடைந்து தங்களுக்குப் பெருமையினை சேர்க்கும்.
தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி அடிக்கல் நாட்டு விழா சீராகவும், சிறப்பாகவும் நடைபெற போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திடுமாறு சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அடிக்கல் நாட்டு விழாவையொட்டி விருதுநகரில் சரத்குமார் ரசிகர்களும், நாடார் சமுதாயத்தினரும் பெருமளவில் திரண்டுள்ளதால் விருதுநகரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்? ஸ்டாலின் - விஜய் தான் காரணமா? பின்னணியில் 3 முக்கிய மேட்டர் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
டெல்லியை துறந்து டார்கெட் 2026! திருமாவளவன் திடீர் முடிவின் பின்னணியில் இருக்கும் பலமான ஸ்கெட்ச் இதுதானா? -
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
87 ஓட்டுகளில் கையை விட்டு போன காட்டுமன்னார்கோவில்! 10 ஆண்டு கழித்து மீண்டும் திருமாவளவன் போட்டி!












Click it and Unblock the Notifications