வான் தாக்குதல் தொடரும்-புலிகள் எச்சரிக்கை
கொழும்பு:வான்வழி தாக்குதல்கள் தொடரும் என்று விடுதலைப் புலிகள் இலங்கையை எச்சரித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் தங்களது வான்வழித் தாக்குதல்களை அடிக்கடி நடத்த ஆரம்பித்துள்ளனர். இதுவரை மூன்று முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், விமானத் தாக்குதல் தொடரும் என புலிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து புலிகள் அமைப்பின் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், இனப் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வுதான் ஒரே வழி என இலங்கை ராணுவம், குறிப்பாக விமானப்படை பிடிவாதமாக உள்ளது.
![]() |
எனவேதான் எங்களுக்கு விமானத் தாக்குதலை நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது. இத்தோடு நிற்க மாட்டோம். இன்னும் நிறையை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். எங்களுக்குத் திருப்பி அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது தாக்குதல் நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று என்றார் இளந்திரையன்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலை சமாளிக்க மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளதாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார். இனப் போரில் இது புதிய பரிமாணமாக உருவெடுத்துள்ளது.
இதை சமாளிக்க சில நவீன ஏற்பாடுகளை இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. அவர்களின் வான் பலத்தைக் குறைப்பதே இப்போதைய முக்கிய வேலையாகும் என்றார்.
![]() |
இதற்கிடையே, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராயல் டச் ஷெல் நிறுவனம் கொழும்பு அருகே உள்ள தனது எண்ணைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியுள்ளது. புலிகளின் 3வது விமானத் தாக்குதலில் இந்த நிறுவனத்தின் எண்ணை கிட்டங்கி சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விநியோகம் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் தொடர் தாக்குதல் காரணமாக இலங்கையில் பங்குகளின் விலையில் கடும் வீழ்ச்சி காணப்படுகிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்துள்ளது.
இந்த நிலையில், புலிகளிடம் தற்போது சாதாரண இலகு ரக விமானங்களே உள்ளன என்றாலும் கூட அவற்றை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என ஜேன்ஸ் வீக்லி நிறுவனத்தின் ஆயுத ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், புலிகளிடம் இருப்பது மிகவும் சிறிதான விமானம்தான். ஆனால் அதற்காக அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சிறிய விமானமாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவதைக் கொண்டு அழிவை நாம் தீர்மானிக்க முடியும்.
புலிகள் மிகவும் திறமையாக அவற்றை இயக்குகிறார்கள். வந்த வேகத்தில் தாக்குதலை நடத்தி விட்டு மின்னலென போய் விடுகிறார்கள். அவர்களை இலங்கை படையினரால் சமாளிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் விமானத் தாக்குதலை இலங்கை பாதுகாப்புப் படையினரால் சமாளிக்க முடியவில்லை, அதற்கு அவர்கள் தயார் நிலையில் இல்லை என்பதையே கடந்த 3 தாக்குதல்களும் நிரூபித்துள்ளன என்றார் அவர்.














Click it and Unblock the Notifications