கொழும்புக்கு இரவு நேர விமானங்கள் ரத்து
கொழும்பு:விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்கள் தொடருவதால் கொழும்பு நகருக்கு இரவு நேர விமானங்களை இயக்குவதை பல்வேறு விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.
கடந்த ஒன்றரை மாதங்களில் மூன்று முறை விடுதலைப்புலிகளின் வான் புலிகள் பிரிவு, விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. விடுதலைப்புலிகளை சமாளிக்கத் தேவையான ஆயுதங்களை வாங்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள், கொழும்பு நகருக்கான இரவு சேவைகளை ரத்து செய்துள்ளன.
இதுகுறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பகல் நேரங்களில் மட்டும் சிங்கப்பூர்-கொழும்பு விமான சேவை இயக்கப்படும். இரவு நேர சேவை ரத்து செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழைம முதல் இது அமலுக்கு வருவதாக அது தெரிவித்துள்ளது.
இதேபோல கத்தே பசிபிக், எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது இரவு நேர விமான சேவையை ரத்து செய்துள்ளன.
இதற்கிடையே, கொழும்பில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் திடீர் தாக்குதல் நடந்தால், அங்கிருந்து சென்னைக்குத் திருப்பி விடப்படும் விமானங்கள், அவசரமாக தரையிறங்குதல், விமானங்களை தற்காலிகமாக சென்னையில் நிறுத்தி வைத்தல் போன்ற தேவை ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை இந்திய விமானநிலையங்கள் ஆணையம் பிறப்பித்துள்ளது. அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்குமாறு சென்னை விமான நிலையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரு முறை விடுதலைப் புலிகள் விமான தாக்குதல்களை நடத்தியபோது கொழும்பிலிருந்து அனைத்து விமானங்களும் சென்னைக்குத் தான் திருப்பி விடப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
இலங்கை விமானம் சுட்டு வீழ்த்தல்?:
இதற்கிடையே இலங்கை விமானப் படையின் மிக்-27 ரக போர் விமானத்தை இரணைமேடு பகுதியில் சுட்டு வீழ்த்திவிட்டதாக புலிகள் கூறியுள்ளனர்.
ஆனால், இதை இலங்கை பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது. அந்த விமானம் தாக்குதல் நடத்திவிட்டு பத்திரமாக திரும்பி வந்துவிட்டதாக இலங்கை கூறியுள்ளது.