தமிழக மீனவர்களை நாங்கள் சுடவில்லை-கடத்தவில்லை: புலிகள் திட்டவட்ட மறுப்பு
கொழும்பு:5 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும், 12 தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
இது குறித்து புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மீனவர்கள் 5 பேர் கடலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் எஙகளுக்கும் தொடர்பிருப்பதாக வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
இது தமிழ் மக்களுக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் எதிரான சக்திகளால் திட்டமிட்டப்பட்டு வெளியிடப்படும் கட்டுக் கதைகள்.
தமிழக மக்களுக்கும் எங்களுக்கும் இடையிலான நல்லுறவை கெடுத்து எங்கள் மக்களை தனிமைப்படுத்தி, அவர்கள் மீது பெரும் பேரவலங்களை ஏவி விடும் இலங்கை அரசின் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
இதற்காகவே கடலில் வைத்து தமிழக மீனவர்களை அவ்வப்போது சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பழியை புலிகள் மீது சுமத்தி வருகின்றனர்.
இதன் மூலம் இந்திய அரசுடன் கூட்டு ரோந்து தொடங்குவதற்கும் அதன் மூலம் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் இலங்கை அரசு கனவு கான்கிறது.
எங்கள் மக்களும் அைமப்பும தமிழக மக்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறோம். தமிழக மீனவர்களை அச்சுறுத்தவோ, அவர்களது உயிருக்கு ஊறு விளைவிக்கவோ ஒரு போதும் நாங்கள் நினைத்ததில்லை.
இலங்கை கடற்படையால் ஏற்பட்ட பல பாதிப்புகளில் இருந்து பல நேரங்களில் தமிழக மீனவர்களை பாதுகாத்து பத்திரமாக திருப்பி அனுப்பியிருக்கிறோம்.
அப்படியிருந்தும் கூட இதுவரை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் வேதனை.
மேலும் 12 தமிழக மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகவ கூறப்படுகிறது (இவர்களை புலிகள் தான் கடத்தியதாக தமிழக காவல் துறை கூறுகிறது). அவர்கள் குறித்த தகவல் அறிய எங்கள் கடல் பிரிவினர் முயன்று வருகின்றனர். அவர்களை மீட்க எந்த ஒத்துழைப்பையும் தர தயாராக இருக்கிறோம்.
இது குறித்து தமிழக காவல்துறை எங்களுடன் பேசி வருவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது.