உல்மரை கடைசியாக சந்தித்த இருவர்பத்திரிக்கையாளர்கள்- பாக் டிவி கூறுகிறது
டெல்லி:பாப் உல்மர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக அவரை சந்தித்த இருவரும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள், அவர்கள் கொலையாளிகள் அல்ல என்று பாகிஸ்தானின் ஜியோ டிவி நிறுவனம் கூறியுள்ளது.
ஜமைக்காவில் கொல்லப்பட்ட பாப் உல்மர் கொலை குறித்து இன்னும் குழப்பமான நிலையே உள்ளது. கடைசியாக அவரைச் சந்தித்த இருவர் குறித்த வீடியோ படம் சமீபத்தில் வெளியானது. பிபிசி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தப் படத்தில் பாப் உல்மர் தனது அறைக்குச் செல்ல முயலுகிறார்.
அப்போது அவருடன் இருவர் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் வெள்ளைச் சட்டை, கருப்புப் பேண்ட் அணிந்துள்ளார். இன்னொருவர் கருப்பு உடை அணிந்துள்ளார்.
உல்மர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக இவர்களுடன்தான் உல்மர் பேசியதாக கூறப்படுகிறது. எனவே இந்த வீடியோ படம் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.
இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜமைக்கா போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் என பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் ஜியோ டிவி கூறியுள்ளது.
அவர்களில் ஒருவர் ஜியோ டிவியைச் சேர்ந்த மஜீத் பட்டி என்றும், இன்னொருவர் அசோசியேட் பிரஸ் ஆப் பாகிஸ்தானைச் (ஏபிபி) சேர்ந்த இஷான் குரேஷி எனவும் ஜியோ டிவி கூறியுள்ளது.
இதுகுறித்து சர்ச்சையில் சிக்கியுள்ள மஜீத் பட்டி கூறுகையில், நானும் ஏபிபி நிருபரும், பெர்வேஸ் மீர் அளித்த விருந்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். விருந்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அந்த விருந்தில் பாப் உல்மரும் கலந்து கொண்டார்.
அவர் தனது அறைக்குள் சென்றபோது நாங்கள் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் காட்சிதான் அது. இதில் வேறு விசேஷம் எதுவும் இல்லை.
அயர்லாந்துடனான போட்டிக்கு முன்பாக, அதாவது மார்ச் 16ம் தேதியன்று அந்தப் படம் பதிவாகியுள்ளது.
உல்மர் பாகிஸ்தான் அணி மீது கவனம் செலுத்தாமல், ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்குக் கட்டுரைகள் எழுதுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுவதாக அப்போது சர்ச்சை எழுந்தது. அதுகுறித்து கேட்கத்தான் அப்போது பேசிக் கொண்டிருந்தோம் என்றார் பட்டி.
இதற்கிடையே, உல்மருக்கு முதலில் விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சுய நினைவிழந்த நிலையில் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளது உறுதியாகியுள்ளதாக பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
உல்மர் கொலை வழக்கை 30 அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை 100 சாட்சிகளின் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.