கருணாநிதி பேரனுக்கு தேர்வு எழுத தடை
சென்னை:போதிய அளவு அட்டென்டன்ஸ் இல்லாததால் இல்லாததால் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் அமைச்சர்களின் பேரன்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குறைந்தபட்ச வருகை பதிவு 75 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனால், முதல்வர் கருணாநிதி மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோரின் பேரன்களுக்காக தான் இந்த திருத்தம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன். அவர் கூறுகையில்,
இது அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட்டால் எடுக்கப்பட்ட முடிவு. டைபாய்டு, சிக்கன் பாக்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை இல்லை.
வருகை பதிவேடு சதவீதம் குறைக்கப்பட்டதில் அரசியல் வாரிசுகள் யாரும் பயனடையவில்லை.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேரன்களுக்கு தேவையான அளவு வருகை இல்லாததால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.