கெளசர் பீபி கற்பழித்து, விஷம் வைத்துக் கொலை
அகமதாபாத்:குஜராத் போலீஸாரால் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சொராப்தீன் ஷேக்கின் மனைவி கெளசர் பீபியை இன்ஸ்பெக்டர் ஒருவர் கற்பழித்து பின்னர் விஷம் வைத்துக் கொலை செய்து விட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி மனைவி கெளசர் பீபியுடன் அமகதபாத்திலிருந்து சாங்க்லி நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த ஷேக்கையும், கெளசர் பீபியையும் போலீஸார் வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிக் கார் ஒன்றில் கடத்திச் சென்றனர்.
இருவரையும் அகமதாபாத் அருகே திஷா என்ற இடத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் சிறை வைத்தனர். பின்னர் ஷேக்கை மட்டும் அங்கிருந்து அழைத்துச் சென்று 26ம் தேதி போலி என்கவுண்டர் மூலம் கொன்று விட்டனர்.
கெளசர் பீபியை, பாஜக கவுன்சிலர் சுரேந்திர ஜிரவாலாவுக்குச் சொந்தமான கோபா என்ற புறநகர்ப் பகுதியில் உள்ள அர்ஹாம் பங்களாவுக்கு கொண்டு சென்று சிறை வைத்தனர். அவருக்குப் பாதுகாப்பாக ஒரு இன்ஸ்பெக்டர் நிறுத்தப்பட்டார்.
அந்த இன்ஸ்பெக்டர் கெளசர் பீபியை கற்பழித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த கெளசர் பீபி, அனைத்தையும் வெளியில் சொல்லப் போவதாக கூச்சல் போட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த இன்ஸ்பெக்டர் கெளசர் பீபிக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டது.
இன்ஸ்பெக்டரின் பெயர் உள்ளிட்ட விவரத்தை குஜராத் காவல்துறை வெளியிடவில்லை. ஆனால், அவர் தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர் என்று மட்டும் தெரிய வந்துள்ளது. சிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன. புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது இத்தகவல்களை குஜராத் அரசு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புகார் குறித்து ஜிரவாலா கூறுகையில், கெளசர் பீபி எனது இல்லத்தில் வைத்துக் கற்பழிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. நான் சபர்மதியில் வசித்து வருகிறேன். எப்போதாவதுதான் கோபாவில் உள்ள பங்களாவுக்கு வருவேன். எனது வீட்டின் காவலரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
கெளசர் பீபி கற்பழித்து, விஷம் வைத்துக் கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டதாக புதிதாக வெளியுள்ள தகவல் குஜராத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications