லண்டனில் தவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்:தனி விமானம் அனுப்பும் இலங்கை
லண்டன்:கொழும்புக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் ரத்து செய்து விட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் லண்டன் நகரில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானத்தை இலங்கை அரசு அனுப்புகிறது.
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் காரணமாக கொழும்பு விமான நிலையத்தில் பெரும் அச்ச சூழல் நிலவுகிறது. பல விமான நிறுவனங்கள் தங்களது இரவு நேர விமான சேவையை ரத்து செய்து விட்டன.
பயணிகளின் வருகை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும் பல விமானங்கள் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனால் தாயகம் திரும்ப முடியாமல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தடுமாறி வருகின்றனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற இலங்கை வீரர்கள் தற்போது லண்டன் வந்துள்ளனர்.
அங்கிருந்து நேரடியாக கொழும்பு செல்ல எமிரேட்ஸ் விமானத்தில் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி வைத்துள்ளதால் கொழும்பு திரும்ப முடியாமல் அவர்கள் லண்டனிலேயே முடங்கியுள்ளனர்.
வியாழக்கிழமையே அவர்கள் கொழும்பு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், புலிகளின் விமானத் தாக்குதல் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் அவர்கள் லண்டன் ஹோட்டலிலேயே தங்க நேரிட்டது.
இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களை தாயகத்திற்கு அழைத்து வர இலங்கை அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி லண்டனிலிருந்து துபாய் வரை கத்தே பசிபிக் விமானம் மூலம் வீரர்களை அழைத்து வருவது, பின்னர் அங்கு சிறப்பு விமானத்தை அனுப்பி கொழும்புக்கு கூட்டி வருவது என திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து விரைவில் நாடு திரும்பி விடலாம் என்று இலங்கை அணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications