டிரைவர் கொர்..காவல் நிலையத்தில் மோதிய லாரி
சென்னைடிரைவர் தூங்கி விட்டதால் கண்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடி காவல் நிலையத்தில் மோதி நின்றது.
சென்னை துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி கிளம்பியது. திருவொற்றியூருக்கு சென்ற அந்த லாரி, சாலையில் போய்க் கொண்டிருந்தபோது டிரைவர் சிவசங்கரனுக்கு தூக்கம் கண்ணைக் கட்டியுள்ளது.
புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அருகே வந்தபோது டிரைவர் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். இதையடுத்து லாரி நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த காவல் நிலையம் மீது மோதி நின்றது.
இதில் காவல் நிலையத்தின் முன்பு போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது மோதி அதை தகர்த்து நின்றது. நல்ல வேளையாக லாரியால் காவல் நிலையத்திற்குப் பெரிய அளவில் சேதமோ அல்லது உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை.
சத்தம் கேட்டு காவலர்கள் ஓடி வந்தனர். லாரி மோதி நிற்பதைப் பார்த்து அதிர்ந்தனர். அதிர்ஷ்டவசமாக லாரி நிதான வேகத்தில் வந்ததால் ஆஸ்பெஸ்டாஸோடு ஆபத்து நின்று விட்டது.
டிரைவர் சிவசங்கரனைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் தூங்கி விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவில் காவல் நிலையத்தில் கண்டெய்னர் லாரி மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.