தமிழக மீனவர்களை காக்கும் புலிகள்-திருமா
சென்னை: தமிழக மீனவர்களுக்கு கடல் புலிகளால் எந்த மிரட்டலும் இல்லை. உண்மையில், சிங்கள கடற்படையிடமிருந்து கடல் புலிகள்தான் தமிழக மீனவர்களைக் காத்து வருகின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் மீனவ பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
தமிழக மீனவர்களை கடல் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக கூறுகிறார்கள். உண்மையில் தமிழக மீனவர்கள் கடலில் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதற்கு கடல் புலிகள்தான் காரணம்.
கடல் புலிகள் இல்லாவிட்டால், அமெரிக்க ராணுவம் தனது தளத்தை திரிகோணமலையில் அமைத்திருக்கும். இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும்.
கடல் புலிகள்தான் தமிழக மீனவர்களின் பாதுகாவலர்களாக விளங்குகிறார்கள். கடந்த 25 ஆண்டு கால வரலாற்றைப் பார்த்தால் இது தெரிய வரும்.
புலிகள்தான் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று கூறப்படுவதில் சதி உள்ளது. திமுக அரசைக் கலைக்கும் நோக்கில் சிலர் இவ்வாறு செயல்படுகிறார்கள்.
ஒவ்வொரு தமிழனும் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முதல்வர் கருணாநிதி இந்த விவகாரத்தில் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
இலங்கையில் வான் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகள் உலக சாதனை படைத்துள்ளனர். இஸ்ரேல் விமானத்தையும் அவர்கள் சுட்டு வீழ்த்தியுள்னர். எந்த இயக்கமும் விடுதலைப் புலிகள் போல நீண்ட போர் வரலாறு கொண்டதில்லை.
கடந்த 25 வருடங்களாக தீரமாக போராடி வருகிறார்கள் புலிகள். வான் வழித் தாக்குதல் மூலம் இனி தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் மூக்கை நுழைக்க முடியாது. சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் கொல்லவில்லை. அவர்கள் பகுதிகளில் குண்டு வீசவில்லை.
ஈழப் போருக்கு இந்திய அரசு தடையாக இருக்கக் கூடாது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் படகுகள் இலங்கைக்கு படையெடுத்துச் செல்லும் என்று தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார். அதை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிக்கிறது என்றார் திருமாவளவன்.