உருகுதே, உருகுதே, வெயிலில் மண்டை காயுதே
வேலூர்:தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி வரும் வெயில் வேலூரில் மட்டும் மக்களை வறுத்து, தார் சாலைகளை உருக்கி பயமுறுத்தி வருகிறது.
தோ, அக்னி நட்சத்திரம் வந்து விட்டது. 4ம் தேதி முதல் நடு மண்டையைப் பிளக்கப் போகிறது வெயில். ஆனால் அதற்கு முன்பாகவே கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் (தென் மாவட்டங்களைத் தவிர) வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக வெயிலின் தலைநகரான வேலூரில் 100 டிகிரியைத் தாண்டித்தான் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. நேற்று உச்சகட்டமாக 104.5 டிகிரி வெயில் அடித்தது. இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.
இதில் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் தார்ச் சாலை உருகி அதில் சென்ற வாகனங்கள் தாரில் பதியும் நிலை ஏற்பட்டது. பேருந்துகள், லாரி போன்ற பெரிய வாகனங்கள் தார்ச் சாலையில் பதிந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் டிரைவர்கள் மிகுந்த தடுமாற்றத்துக்கு ஆளாகினர். இதை விடக் கொடுமை பைக் பாண்டிகளுக்குத்தான்.
ஹெல்மட்டும் போட முடியாமல், வெறும் தலையுடனும் போக முடியாமல் கடும் அவஸ்தையுடன் வண்டிகளை ஓட்டிச் சென்று கொண்டிருக்கின்றனர் வேலூர் டூவீலர் ஓனர்கள். மொட்டைத் தலை பிளஸ் வழுக்கைத் தலையுடன் இருப்பவர்களின் நிலையை விளக்கிச் சொல்ல வேண்டாம்.
வெயிலின் கொடுமை உக்கிரமாக இருப்பதால், சர்பத், பழச் சாறு, கரும்புச் சாறு, தர்பூசணி, இளநீர் வியாபாரம் படு அமோகமாக இருக்கிறது. என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை, மண்டைச் சூட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் மக்கள் இருப்பதால் இந்த வியாபாரிகளின் பிழைப்பு மட்டும் படு கூலாக இருக்கிறது.
வேலூர் மட்டுமல்ல, சேலம் உள்ளிட்ட பல நகரங்களிலும் இதே கதிதான். 4ம் தேதி முதல் நாறப் போகிறது பொழப்பு என்று மக்கள் இப்போதே பயந்து போய் சூரியபகவானின் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர காலத்தை எண்ணி நடுங்கிக் கொண்டுள்ளனர்.