புரோக்கர்களிடம் சிக்கித் தவிக்கும் ரயில் பயணிகள்
சென்னை:தமிழகத்தில் ரயில்களின் முன் பதிவில்லாத டிக்கெட்டுகளை புரோக்கர்கள் கும்பல் மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்று பயணிகளை தவிக்க விட்டு வருகின்றனர்.
கோடை விடுமுறை காரணமாக ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
இதனால் ரயில்களில் முன் பதிவில்லாத பொது பெட்டிகளில் டிக்கெட் வாங்க நீண்ட வரிசைகள் நிற்கின்றன.
இங்கு தான் புரோக்கர்களும் சில ரயில்வே ஊழியர்களும் புகுந்து விளையாடுகின்றனர். மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கும் இந்த புரோக்கர்கள் கும்பல் அந்த டிக்கெட்டை பல மடங்கு விலை வைத்து விற்கின்றன.
இதில் 50 சதவீதம் கவுண்டரிலுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு போய்ச் சேர்ந்துவிடுகிறதாம். இதனால் வரிசையில் நிற்கும் பயணிகளை கவனிக்காமல் இந்த புரோக்கர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ரயில்வே ஊழியர்கள். இவர்களின் கூட்டுக் களவாணித் தனத்துக்கு ரயில்வே போலீசாரும் உடந்தை என்பது தான் கேவலமான விஷயம்.
கூட்டத்தை கட்டுப்படுத்த நிற்கும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரோ, ரயில்வே போலீஸாரோ இந்த புேராக்கர்களின் அட்டூழியத்தை கண்டுகொள்வதில்லை.
எழும்பூரில் பிளாட்பாரம் டிக்கெட் கொடுக்கும் ஊழியர்களும் இந்த புரோக்கர்களுடன் கை கோர்த்துக் ெகாண்டு டிக்கெட் விற்று வருகின்றனர். இதனால் இங்கு பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே அடிதடியே நடந்துள்ளது.
கோடை சீசனை பயன்படுத்தி புரோக்கர்களும் ரயில்வே ஊழியர்களில் சிலரும் நல்ல துட்டு சம்பாதித்து வருகின்றனர்.
ஏசி ரூம் அதிகாரிகளுக்குத் தான் பாவம் ஒண்ணுமே தெரியாதே..!!!